மகா பெரியவா!
என் மகன் திருமணம் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பாக நடை பெற்றது.செப்டம்பர் 16ஆம் தேதிதான் இரு வீட்டார் சேர்ந்து 12-12-2013 திருமணம் செய்ய முடிவெடுத்தோம் .உடனடியாக சத்திரம் தேடினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.ஒரு சிலர் டிசம்பர் 2014லுக்கா வேண்டும் என்று நகைத்தார்கள் .டிசம்பர் பனிரெண்டாம் தேதியை விட்டால் வேறு தேதி தற்போதைக்கு இல்லை என்ற நிலையில் சத்திரம் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது .
செப்டம்பர் 19ஆம் அன்று இரவு என் தங்கை கணவரிடம் மறுநாள் பரங்கிமலை பகுதியில் உள்ள சில சத்திரங்களுக்கு சென்று பார்க்கலாம் என்று கூறினேன்.அவரும் சரி என்றார்.ஒரு மணி நேரத்தில் என் தங்கை கணவர் கூப்பிடு 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' மண்டபம் காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர் சொன்னதாக கூறினார்.மேலும் ,என் தங்கைதான், நான் பேசியபோது ஹாலில் மாட்டியிருந்த மகா பெரியவா படத்தை பார்த்தவண்ணம் பெரியவா பேர்ல இருக்கும் 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' கிடைக்குமான்னு பாருங்களேன் என்று சொன்னதாகவும், உடனே உரிமையாளருக்கு போன் பண்ணி அவர் வரச் சொன்னதையும் கூறினார்,என் தங்கைகணவர்.
மறுநாள் முதல வேலையாக 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்'சென்று உரிமையாளரிடம் பேசி அட்வான்ஸ் கொடுக்கும் நேரத்தில் மண்டப மேனேஜர் உரிமையாளரிடம் ஓடி வந்து 'சார் ,ஒரு தவறு நடந்து விட்டது 'டிசம்பர் 11ஆம் தேதி ஒரு விழாவிற்கு அட்வான்ஸ் வங்கி விட்டேன் ;நோட்டீஸ் போர்டு சார்ட்டில் குறிக்க மறந்து விட்டேன் .எனவே டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மண்டபம் கல்யாணத்திற்கு கொடுக்க வாய்ப்பில்லை' என்று கூறினார்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று வருத்தப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து உரிமையாளரிடம் எதாவது அட்ஜஸ்ட் பண்ணி டிசம்பர் 12ஆம் தேதி கல்யாணம் நடக்க வழி சொல்லுங்கள் என கூறினோம் நான் ,என் தங்கை கணவர் மற்றும் என் சம்பந்தி.அவர் தயங்கியபடி 'சார் தப்பு நடந்து போச்சு ;உங்களுக்கு ஆட்சேபணை இல்லா விட்டால் அருகில் ஒரு மண்டபம் கட்டி கொண்டு இருக்கிறார்கள் ;நவம்பர் மாதம் ரெடி ஆகிவிடும் ;நம்ம கல்யாணம் டிசம்பருக்குள் பக்காவா ரெடி ஆகிவிடும்;பார்க்கலாமா 'என்றார் .அவரே தன் காரில் எங்கள் மூவரையும் அழைத்து சென்று காட்டினார் பாருங்கள் 'ஆனந்த மஹால்' மண்டபத்தை!அசந்து விட்டோம் நாங்கள்!
உள்ளே நுழைந்தவுடன் அவர் 'சார்,உங்க வீட்டு கல்யாணம் இங்க தான்; அட்வான்ஸ் எடுங்க 'என்று கூற உடனே ஒரு 500 ரூபா தாளை எடுத்துக்கொடுத்தேன் நான்.A /C ரூம் ,A /C முஹுர்த்த ஹால் ,A /C டைனிங் ஹால் என்று எங்கள் அனைவருக்கும் பிடித்து விட்டது..எங்களை இங்கு அழைத்து வந்த 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' உரிமையாளருக்கும் எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.அந்த உரிமையாளர் அறுசுவை அரசு திரு .கணேசன் அவர்கள்! அன்று மதிய உணவு எங்களுக்கு அவர் வாங்கிதர ,அதிலிருந்து ஸ்வீட்டை என் சம்பந்தி எனக்கும் என் தங்கை கணவருக்கும் ஊட்டிவிட்டு கட்டி பிடித்தபொழுது எங்கள் மூவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!
அப்புறமென்ன!கிடுகிடு என மண்டப அட்வான்ஸ் கொடுக்கும்போது பார்த்தால் ஆனந்த மஹால் ஓனர் என் தங்கை கணவருக்கு மிகவும் தெரிந்த நண்பர்.
1991 இல் என் மகன் உபனயனத்திற்கு 'ஏலக்காய்' மாலை கொடுத்து ஆசிர்வாதம் செய்தவர் மகா பெரியவா.இப்போது அவனின் திருமணத்திற்கு
'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' காலியாக இருப்பதாக வரச் சொல்லி (முதல் நாள் இரவே காலி இல்லை என்று தெரிந்திருந்தால் அங்கு செல்ல வாய்பிரிந்திருக்காது) ஆனந்த மகாலை காட்டிக் கொடுத்து திருமணத்தை நடத்திக் கொடுத்திருக்கிறார் வாழும் தெய்வம் மகா பெரியவா!
அறுசுவை அரசு திரு .கணேசன்அவர்களின் சமையலுடன்
திரு.நித்யானந்தம் அவர்களின் ஆனந்த மகாலில் மகா பெரியவா ஆசிர்வாதத்துடன் 12-12-2014 அன்று சிறப்பாக நடை பெற்றது என் மகன் திருமணம்!